உரைநடை - இயல் - 1
உரைநடையின் அணிநலன்கள்
குறிப்புச் சட்டகம்
முன்னுரை -இலக்கணம் - அணிநலன் - புதிய உத்திகள் - முரண்படுமெய்
உச்சநிலை - முடிவுரை.
முன்னுரை:
சங்கப் புலவர்கள் இலக்கியங்களைச் செய்யுட் பாக்களாகவே அமைத்தனர்.
அப்பாடல்கள் அகம் புறம் என்று வகைப்படுத்தப்பட்டன. அவை
தனிப்பாடல்களாகவும் தொகை நூல்களாகவும் அமைந்தன. தற்காலத்தில்
உரைநடை இலக்கிய வடிவத்தில் நாவல் சிறுகதை புதுக்கவிதை எனும் \
வடிவில் வளர்ச்சி பெற்றுள்ளது. உரைநடையின் அணிநலன்கள் பற்றி
இக்கட்டுரையில் காண்போம்.
இலக்கணம்:
தொல்காப்பியர் தனது இலக்கண நூலில் உரைநடை பற்றியும் குறித்துள்ளார்.
சங்கப் பாடல்களில் உவமை அணி பயன்படுத்தப்பட்டது. பின்னர் வந்த தண்டி
ஆசிரியர் உவமை உவமேயம் இரண்டிற்கும் வேற்றுமை தோன்றாதபடி பாடுதலை
உருவகம் என வகைப்படுத்தினர். இலக்கியம் உயிரோட்டமாகவும் உணர்ச்சி
உடையதாகவும் பொருள் புரிதல் தன்மைக்கும் அணிகள் உதவுகின்றன.
அணிநலன்:
இலக்கியம் என்பது படிப்பவருக்கும் கேட்பவருக்கும் இன்பம் தருவதாக அமைதல்
வேண்டும். படைப்பாளி சொல்ல வரும் கருத்தை மிகத் தெளிவாக எடுத்துரைப்பதற்கு
அணிநலன்கள் துணை நிற்க வேண்டும். தற்கால உரைநடை இலக்கியம்
படைப்பவர்கள் அணிகலன்களைப் பயன்படுத்தி தந்த அதே உணர்வை சுவையை
அளிக்கின்றனர்.
புதிய உத்திகள்:
கால மாற்றத்திற்கு ஏற்ப உரைநடை இலக்கியம் பல புதுமைகளைப் பெற்று
சிறப்பாக வளர்ந்துள்ளது. அவற்றில் சிலவற்றை இங்கு காண்போம்.
இணை ஒப்பு:
உரைநடையில் பயன்படும் உவமை அணியை இணை ஒப்பு என்கிறோம்.
“ புரோகிதருக்காக அமாவாசை காத்திருப்பதில்லை” , “ ஊர் கூடிச்
செக்குத்தள்ள முடியுமா ? “ என்பன இராமசாமி அவர்கள் ‘ மழையும் புயலும் '
எனும் நூலில் குறிப்பிட்டுள்ள உவமை அணி ஆகும்.
உவமை:
“ திருப்பரங்குன்றத்தின் அழகை காண்பதற்கு என்றே இயற்கை பதித்து
வைத்த இரண்டு பெரிய நிலைக்கண்ணாடிகளைப்போல் வடபுறம்,
தென்புறமும் நீர் நிறைந்த இரு கண்மாய்கள் " என்று எழுதியுள்ளார்
நா. பார்த்தசாரதி தனது ' குறிஞ்சி மலர் ' நூலில் .
இலக்கணை: ( analogy )
அஃறிணைப்பொருள்கள் எல்லாம் சொல்வது போலவும் , கேட்பது போலவும்
கற்பனை செய்துகொண்டு இலக்கியம் படைப்பது இலக்கணை எனப்படும்.
தமிழ்த் தென்றல் திரு வி.கல்யாண சுந்தரனார் இந்த யுத்தியை
அழகாகப் பயன்படுத்தியுள்ளார்.
“ சோலையில் புகுவேன்; மரங்களில் கூப்பிடும்; விருந்து வைக்கும்;
ஆலமர நிழலில் அமர்வேன்; ஆல் என் விழுதைப் பார் அரசுக்கு இது உண்டா ? என வினவும்..,..என்று குறிப்பிட்டுள்ளார்.
எதுகை மோனை:
வாக்கியங்கள் எதுகையும் மோனையும் அமையும் படியாக எழுதுதல்.
இரா. பி. சேதுப்பிள்ளை தனது, தமிழ் இன்பம் நூலில் ,
‘ தென்றல் அசைந்து வரும் தமிழ்நாட்டில் அமைந்திருந்த குற்றாலம்.
மழை வளம் படைத்த பழம்பதி ஆகும். அம்மலையில் கோங்கும் வேங்கையும்
ஓங்கி வளரும்……' என எதுகை மோனையை அமைத்துள்ளார்.
முரண்படு மெய்மை : ( paradox )
உண்மையில் முரண்படாத மெய்மையைச் சொல்லுவது முரண்படு மெய்மை ஆகும்.
இந்த உலகத்தில் பயம் என்ற ஒன்றிற்குத் தவிர வேறு எதற்கும் நாம் பயப்பட
வேண்டாம்.
சொல் முரண்: ( oxymoron )
முரண்பட்ட சொற்களை எழுதுதல் சொல் முரண் எனப்படும்.
“ கலப்பில்லாத சுத்தப் பொய் “
எதிரிணை இசைவு: ( antithesis)
எதிரும் புதிருமான கருத்துக்களை அமைத்து எழுதுதல் எதிர்வினை இசைவு
எனப்படும்.
தோழர் ப. ஜீவானந்தம்
“ குடிசைகள் ஒருபக்கம் ; கோபுரங்கள் மறுபக்கம்; பசித்த வயிறுகள் ஒருபக்கம்;
புளித்த ஏப்பம் மறுபக்கம்; மெலிந்த எலும்புக்கூடுகள் ஒருபக்கம்; பருத்த
தொந்திகள் மறுபக்கம்; கேடுகெட்ட இந்தச் சமுதாயத்திற்கு
எப்போது விமோசனமோ ? தோழர்களே ! சிந்தியுங்கள் “ என்று எழுதுகிறார் தோழர்.
உச்சநிலை: ( climax )
உணர்ச்சிப் பெருவெள்ளம் வெளிப்பட இலக்கியம் படைத்தலை உச்ச நிலை என்பர்.
சொல்லலையோ, கருத்தையோ வைக்கும் முறையால் அது சிறக்கும்.
மகாகவி சி. சுப்ரமணிய பாரதியார்.
இந்தியாவைப் பற்றிக் குறிப்பிடும் போது,
“ இந்தியாவின் நன்மை தான் என் நன்மை ; இந்தியா தான் என்னுடைய மோட்சம்;
இந்தியா தான் என் இளமையின் மெத்தை; இந்தியாதான் என்கிழக் காலத்தின் காசி
என்று எழுதுகிறார்.
உணர்ச்சி நிலை:
கேள்வியிலேயே பதில் இருப்பது போல எழுதுவது உணர்ச்சியை வழிபாட்டிற்கு
உதவக்கூடியது பெரியாரைப்பற்றி அண்ணாவின் கூற்று இங்கு மிகப் பொருத்தமாக அமைந்துள்ளது.
“ அவர் பேசாத நாள் உண்டா ? கேட்காத ஊர் உண்டா ? அவரிடம் சிக்கித் தவிக்காத
பழமை உண்டா ? எதைக்கண்டு அவர் திகைத்தார் ? எந்தப்புராணம் அவரிடம்
தாக்குதலை பெறவில்லை ? என்று அண்ணா குறிப்பிடுகிறார்.
முடிவுரை:
சங்ககாலத்தில் செய்யுள் பாக்கள் சிறப்புற்று இருந்தன. அதுபோல தற்காலத்தில்
உரைநடை இலக்கியம் வளர்ந்துள்ளது. செய்யுள் பாக்கள் தந்த இலக்கிய நயத்தை
உரைநடை இலக்கியம் தருகிறது என்பதை உரைநடையின் அணிகலன்கள்
பாடப் பகுதியின் மூலமாக நாம் இங்கு கண்டோம்.
வினா - விடைகள் குறிப்பு.
மாணவர்கள் தாங்கள் எளிது என நினைக்கும் ஏதேனும் நான்கு அணிகலன்களைப் பயன்படுத்திக் கொண்டால் போதுமானது.
துணைப்பாட வினா விடைகளையும் கட்டுரை வடிவில் எழுதுதல் வேண்டும். எனவே, முன்னுரை முடிவுரை தவிர்த்து ஏதேனும் 3அல்லது4 தலைப்புகளைத் தேர்ந்தெடுத்து எழுதினால் போதுமானது.
அறிந்து கொள்ளுதல் புரிந்துகொள்ளுதல் தெளிவு பெறுதல் என்கிற நிலையில் இவற்றை பன்முறை படித்து உணர்ந்து கொள்ள வேண்டும்.
மேற்கண்ட தலைப்புகளில் எது எளிது என மாணாக்கர்களுக்குத் தோன்றுகிறதோ, அந்த ஐந்து தலைப்புகளைத் தேர்வு செய்து எழுதினாலே போதுமானது.
வாழ்க வளமுடன் ..! வாழ்க வையகம்..!
Comments
Post a Comment