STD VIII " காலம் உடன் வரும்"
" காலம் உடன் வரும்" கதையைச் சுருக்கி எழுதுக ( இயல் - 6 வகுப்பு - 8 )
முன்னுரை
சுப்பிரமணியத்தின் கவலை
நண்பர் இரகுவின் உதவி
பாவு பிணைத்தல்
முடிவுரை
முன்னுரை:
நெசவுத்தொழிலில் ஏற்படும் இன்னல்களை மிகத்தெளிவாக விளக்கி உள்ளது கதை . வறுமையில் வாடும் நெசவாளர்களின் நிலையையும் , அவர்களின் கடுமையான உழைப்பையும் காட்டுவதாக அமைந்துள்ளது ஒச்சம்மாவின் கதை.
சுப்பிரமணியத்தின் கவலை:
வழக்கமாக வெள்ளக் கோயில் தினேஷ் துணியகத்திலிருந்து ஏற்றுமதிக்காகத் துணிகளை அனுப்பி வைப்பார்கள். ஒருநாள் தறிநெய்ய ஆள் இல்லாததால், துணி நெய்யத் தாமதமானது. சுப்பிரமணி, ஆனந்திகா நிறுவனத்திடம் ஆளில்லை என்று சொல்லியும், அவர்கள் நாளைக்குள் கட்டாயம் துணியை அனுப்பி வைக்க வேண்டும் என்றனர். எப்படியாவது துணியை நெய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படத் தொடங்கினார் சுப்பிரமணி.
நண்பர் இரகுவின் உதவி :
சுப்பிரமணி, இரகுவின் தறிப்பட்டறைக்குச் சென்றார். பாவுப் பணிக்கு ஆள் வேண்டும் என்றார் . உடனடியாக யாரையாவது அனுப்பி உதவுங்கள் என்று வேண்டினார். இரகுவும் தன்னுடைய தறியில் வேலை பார்க்கும் மாயழகு, ஒச்சம்மாவைப் பார்க்கும்படி கூறினார். சுப்பிரமணியும் அவர்களின் உதவியை நாடிச் சென்றார். தம்பதியர் இரவு பகல் வேறுபாடு இன்றித் தறி ஓட்டுவதைச் செய்து வந்தனர். தங்களின் குழந்தையை நன்கு படிக்க வைக்க வேண்டும் என்று கனவு கண்டனர். ஒச்சம்மா தறி ஓட்டுவது மட்டுமின்றி, ஓடு எடுத்தல் , பாவு பிணைத்தல் , கோன் போடுதல் என எல்லா வேலைகளையும் கற்றிருந்தாள்.
பாவு பிணைத்தல் :
மாயழகுவிடம் , தனது நிலையையும் , இரகு அனுப்பியதாகவும் கூறினார். உடனே மனைவி ஒச்சமாவை அனுப்பி வைத்தான். தூங்கிக் கொண்டிருந்த கைக்குழந்தையும் எடுத்துக்கொண்டு ஒச்சமா கிளம்பினாள். சுப்பிரமணியின் பட்டறைக்குச் சென்றதும், தறியைப் பாவு பிணைத்து ஓட்டத்துவங்கினாள். வேலையின் இடையில் குழந்தை விழித்துக்கொண்டு அழுதது. அதற்குப் பாலூட்டித் தூங்க வைத்தாள். இரவோடு பாவினை இணைத்து வேலையை முடித்தாள். காலையில் இரட்டைச் சம்பளம் கொடுத்தார் சுப்பிரமணியம். பொழுது விடிந்ததும் ஒச்சம்மாளைக் காரில் கொண்டுபோய் வீட்டில் இறக்கிவிட்டார். குழந்தை இன்னும் உறங்கிக் கொண்டிருந்தது. ஒச்சம்மாள் வழக்கமான வீட்டுவேலைகளைச் செய்யத் தொடங்கினாள்.
முடிவுரை:
நெசவாளர்கள் தங்களின் வறுமையின் நீங்கவேண்டி கடுமையாக உழைப்பவர்கள். இரவுபகல் பார்க்காமல் நெசவுப்பட்டறைகளில் வேலை செய்பவர்கள் தொழிலாளர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கனவே அவர்களின் வாழ்வாக இருந்தது. நெசவுத்தொழிலாளர்களின் வாழ்க்கைச் சிக்கலையும், வாழ்க்கைப் போராட்டத்தையும் நமக்கு அழகாக உணர்த்தியது ஒச்சம்மாளின் கதை.
தமிழாசிரியர் பழ. அன்புச்செல்வன் KPCVSSSS ARM CH. APL2026 வணக்கம்.
Comments
Post a Comment