பத்தாம் வகுப்பு இயல் 5 - செய்யுள் / உரைநடை - வினா விடைகள்
பத்தாம் வகுப்பு இயல் - 5 செய்யுள் / உரைநடை வினா விடைகள்
நீதி வெண்பா :
கல்வியின் சிறப்பு:
உலகம் கற்றவர் வழியில் செல்கிறது என்றுகூறுகிறது சங்க இலக்கியம்.தோண்டும் அளவிற்கு நீர் சுரப்பது போலக் கற்கும் அளவிற்கு அறிவானது ஊறும் என்கிறது திருக்குறள். பூக்களை நாடிச்செல்லும் வண்டுகள்போல நல்ல நூல்களை நாம் நாளும் நாடிக்கற்க வேண்டும்என்கிறது அறவிலக்கியங்கள்.
அன்பினை வளர்த்து , அறிவினைப்பெருக்கி , செயலினைச் சீராக்கி, மனமயக்கத்தை அகற்றுவது கல்வி. அறிவினுக்குத் தெளிவைத் தந்து, உயிருக்கு அரிய துணையாய் இருந்து இன்பந் தருவது கல்வியே ஆகும். எனவே, அத்தகு கல்வியைப் போற்றிக்காக்க வேண்டும்.
சதம் என்பதற்கு நூறு என்பது பொருள். ஒரே நேரத்தில் புலமை, கவனம் , நினைவாற்றல், நுண்ணறிவு விழிப்பு நிலையில் இருந்து கொண்டு, தன்னைச் சுற்றி நிகழும் நூறு செயல்களையும் நினைவில் நிறுத்தி , விடையளித்தலே சதாவதானம் என்று அழைக்கப்படும்.
அத்தகு திறன் பெற்றவர்தான் செய்குத்தம்பிப் பாவலர் அவர்கள் . அதனை, சென்னை விக்டோரியா அரங்கில் செய்தும் காட்டினார். சதாவதானி என்று பாராட்டப்பட்ட அவர் , பிறந்த ஊரான இடலக்குடியில் மணி மண்டபமும் , பள்ளியும் அமைக்கப்பட்டுள்ளது. இவர் சீறாப்புராணத்திற்கும் உரை எழுதியுள்ளார். இவரது நூல்கள் அனைத்தும் நாட்டுடமை ஆக்கப்பட்டுள்ளன என்பது தனிச்சிறப்பாகும்.
வினாக்கள்
1. கல்வியின் சிறப்பு யாது.?
2. கல்வியை ஏன் போற்றிக்காக்க வேண்டும்?
3. சதாவதானம் - என்றால் என்ன?
4. செய்குத்தம்பிப் பாவலர்- பற்றிக்குறிப்பு எழுதுக?
திருவிளையாடற் புராணம்.
பரஞ்சோதி முனிவர்.
இடைக்காடனார் கவி பாடல் / குசேல பாண்டியன் செவி சாய்க்காமை:
குசேலபாண்டியன் மிகுந்த கல்வியறிவு உடையவன் என்று பலரும் கூறக்கேட்டார் இடைக்காடனார். கபிலரின் நெருங்கிய நண்பரான இவர் , வேப்ப மாலை அணிந்த மன்னனின் அவைக்குச்சென்று கவி பாடினார். பொருட்செல்வத்தோடு கல்விச்செல்வமும் மிக்குடைய பாண்டியன் மன்னன், இடைக்காடனாரின் பொருட்சுவை நிறைந்த கவிதையைச் சுவைக்காமல் , தலை அசைக்காமல் புலவரின் புலமையை அவமதித்தான்.
இடைக்காடனார் இறைவனிடம் சென்று முறையிடல்.
இறைவன் உறையும் இடம் சென்ற இடைக்காடனார், " பாண்டியன், என்னை இகழவில்லை , சொல்லின் வடிவமாக விளங்கும் பார்வதி தேவியையும் , சொல்லினது பொருளாக விளங்கும் உன்னையும் அவமதித்தான் " என்று சினத்துடன் கூறினார்.
இறைவன் கோவிலை நீங்குதல்.
இறைவன் இடைக்காடனாருக்கும் , கபிலருக்கும் இன்பம்தர எண்ணிய இறைவன், ஞான வடிவாகிய லிங்க வடிவத்தை மறைத்து , உமாதேவியாரோடு வையை ஆற்றின் தென்புறத்தில் திருக்கோவில் கொண்டு அமர்ந்தார்.
பாண்டியன் காரணம் கேட்டல்/ இறைவன் பதிலுரைத்தல்.
குசேல பாண்டியன் இறைவனைப் பணிந்து , காரணம் யாதென வினவினான்.
என்னால் , என்படைகளால் , கள்வரால், என்பகைவரால், காட்டில் வாழும் விலங்குகளால், இடையூறு ஏற்பட்டதோ ? . இந்நாட்டின் மக்கள் ஒழுக்கம் குன்றினாரோ? தவமும் தருமமும் சுருங்கியதோ..? இல்லறமும் , துறவறமும் தவறியதோ ? எமது தந்தையாகிய இறைவனே யான் எதனையும் அறியேன். அருள் கூர்ந்து காரணம் யாதென கூறுங்கள் என வேண்டினான் குசேல பாண்டியன்.
" கடம்ப வானத்தை நாம் ஒருபோதும் நீங்க மாட்டோம். இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்த குற்றத்திற்காகவே இங்கு வந்தோம். உன்னிடம் யாம் கண்டதவறு வேறு ஒன்றுமில்லை " என்று கூறினார் இறைவன். இடைக்காடனார் மீது கொண்ட அன்பே காரணம் என்றார்.
இடைக்காடனாருக்குக் குசேல பாண்டியன் பெருமை செய்தல்.
அசரீரியாக வானிலிருந்து இறைவனது ஒலித்த சொற்கேட்ட குசேல பாண்டியன் தனது பிழை உணர்ந்து வருந்தினான். உமையொரு பாகம் கொண்ட இறைவனே , புண்ணியனே , சிறியவர்களின் குற்றம் பொறுப்பது பெரியோர் பண்பல்லவா? பொறுத்தருள வேண்டு - -மெனப்பணிந்தான்.
மன்னனது மாளிகையானது வாழை , கமுகு, சாமரை , பலவகை மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. விளக்குகளால் ஒளியூட்டப்பட்டது. அன்றலர்ந்த மாலைகளால் ஒப்பனை செய்யப்பட்டது. புலவர்கள் பலரும் சூழ்ந்திருக்க, அறிவையே அணிகலனாகக் கொண்ட இடைக்காடனாரை மங்களமாக அழகு செய்து பொன்னிருக்கையில் அமர வைத்தான் பாண்டிய மன்னன்.
அவையில் இருந்த பாண்டிய மன்னன் , " புண்ணிய வடிவான புலவர்களே , நான் அறியாது இடைக்காடனாருக்குச் செய்த குற்றத்தைப் பொறுத்தருள்க ! என வேண்டினான். அவையில் இருந்தோர் , பாண்டியனின் அமுதம் போன்ற குளிர்ந்த சொற்கேட்டு தங்களின் சினந் -தணிந்து மகிழ்ந்தனர்.
இவ்வாறு , தமிழ்ப்புலவருக்கு இறைவன் அருள் செய்த தன்மையானது இப்பாடப்பகுதியில் அழகாக விளக்கப்பட்டுள்ளது.
வினாக்கள்
1. குசேல பாண்டியன் செய்த பிழை யாது ?
2. இடைக்காடனார் இறைவனிடம் முறையிட்டது யாது ?
3. கபிலரின் நண்பரான இடைக்காடனரை மகிழ்விக்க இறைவன் செய்த திருவிளையாடல் என்ன ?
4. தனது தவறை உணர்ந்த குசேல பாண்டியன் செய்தது என்ன.?
பாடம் 5 உரைநடை -- மொழிபெயர்ப்புக்கல்வி
மொழிபெயர்ப்பின் தேவை ;
- ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவதே மொழிபெயர்ப்பு ஆகும் என்கிறார் அறிவியல் தமிழ்ச் சொல்லகராதியை உருவாக்கிய தமிழறிஞர் மணவை முஸ்தபா அவர்கள்.
- உலக நாகரீக வளர்ச்சிக்கும் , பொருளியல் மேம்பாட்டிற்கும் மொழிபெயர்ப்பு ஒரு காரணமாகும் என்கிறார் மு.கு.ஜெகந்நாத ராஜா அவர்கள்.
- தொல்காப்பியர் தனது 98 வது மரபியல் நூற்பாவில் , மொழிபெயர்த்தல் எனும் தொடரைப் பயன்படுத்தியுள்ளார்.
- சின்னமனுர் செப்பேடுகளில் " மகாபாரதம் தமிழ்ப்படுத்தும் மாதுராபுரித் தமிழ்ச்சங்கம் " - எனும் தொடர் மூலமாக சங்க காலத்தில் தமிழில் மொழிபெயர்ப்பு மேற்கொள்ளப்பட்டதை அறிய முடிகிறது.
- வடமொழி கதைகளைத் தழுவி தமிழில் காப்பியங்களும் , புராணங்களும் படைக்கப்பட்டன. அந்த வகையில் படைக்கப்பட்டவையே பெருங்கதை , சீவக சிந்தாமணி , கம்பராமாயணம் , வில்லிபாரதமும் ஆகும்.
- மனிதக் கூட்டங்களை இணைத்துச் சிறப்பாகச் செயல்பட வைப்பது "மொழி " எனும் வலிமை மிக்க "பாலமே " ஆகும் என்கின்றனர், மொழியியல் அறிஞர்கள் .
- இந்திய விடுதலைக்குப்பின் நாட்டின் ஒற்றுமைக்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அரசு அதற்கு மொழியை ஒரு கருவியாகக் கொண்டது. நாட்டின் பல்வேறு மொழி சார்ந்த எழுத்தாளர்களை ஒன்றிணைத்தது. அவர்களது படைப்புகளை மொழிபெயர்த்து , பிற மொழிகளில் வெளியிட்டு ஒன்றுபடுத்தியது. இப்பணிகளைத் தேசியப் புத்தக நிறுவனம் , சாகித்திய அகாடமி , தென்னிந்தியப் புத்தக நிறுவனம் ஆகியன செய்தன.
- மொழிபெயர்ப்புக் கல்வியால் அனைத்துலக அறிவைப்பெற முடியும்.
- எல்லா அறிவு சார் / தொழில்சார் பணிகளுக்காக வெளிநாட்டினரை எதிர்பார்க்க வேண்டியதில்லை.
- மனித வளத்தை முழுமையாகப் யன்படுத்த முடியும்.
- " யாதும் ஊரே யாவரும் கேளீர் " - எனும் ஒருலகத் தன்மையைப் பெற முடியும்.
- இந்திய விடுதலைக்குப்பின் வெளிநாட்டுத் தூதரகங்கள் நிறுவப்பட்டன. அவற்றின் மூலமாக அவர்களின் காலை, பண்பாடு , வளர்ச்சியோடு , மொழியைக் கற்றுத்தரும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணியைத் தனியார் நிறுவனங்களும் செய்து வருகின்றன.
- பள்ளி ,கல்லூரி, பல்கலைக்கழகங்களின் மூலமாகவும் பிறமொழிக் கல்வி கற்கும் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
- உலகப்போரின்போது , ஜப்பானின் " மொகு சாஸ்ட்டு " எனும் தொடருக்கு , ' விடை தர அவகாசம் வேண்டும் ' எனும் தொடரை - மறுக்கிறோம் என்று பொருள் கொண்டதாலேயே ஹிரோஷிமாவில் குண்டு வீசப்பட்டது எனும் வரலாற்று நிகழ்வு மொழிபெயர்ப்பின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக உள்ளது.
- ஒரு நாட்டின் மின்னாற்றல் பயன்பாட்டைப் பொறுத்து அந்நாட்டின் தொழில்வளர்ச்சியை மதிப்பிடுவார்கள். அதுபோல , ஒரு நாட்டின் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்ட நூல்களின் எண்ணிக்கியைக்கொண்டு , அந்நாட்டின் பண்பாட்டையும் , அறிவையும் மதிப்பிடுவார்கள்.
- மொழிபெயர்ப்பு இல்லாவிடில் சில படைப்பாளிகளும் கூட உருவாகி இருக்க முடியாது. கம்பரும், ஷேக்ஸ்ப்பியரும் கொண்டாடப்படுவதன் காரணம் அவர்களது படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டதே ஆகும். இரவிந்த்ராநாத் தாகூர் எழுதிய கவிதைத் தொகுப்பை , ஆங்கில மொழியில் மொழிபெயர்த்தபின்னரே " நோபல் பரிசு " பெற்றது.
- 18ம் நூற்றாண்டு வரை வடமொழி நூல்கள் பல தமிழில் ஆக்கப்பட்டன. ஆங்கிலேயரின் வருகைக்குப்பின் , ஆங்கில ஐரோப்பிய அறிமுகமாயின. தமிழ்நூல்களும் பிற மொழியில் மொழி பெயர்க்கப்பட்டன. திருக்குறள் உலக மொழிகளுக்கு உரிய நூலக மாறியது மொழிபெயர்ப்பினால்தான்.
- பிற மொழி இலக்கியங்களை அறிந்துகொள்ள மொழிபெயர்ப்பு உதவுகிறது. புதிய படைப்புகள் உருவாகவும் உதவுகிறது. பொதுநிலை உடைய படைப்புகளை மொழி எனும் வேலி தடுக்கிறது. அதனை அகற்றும் பணியை மொழிபெயர்ப்புச் செய்கின்றது.
- மொழிபெயர்ப்பின் பயனால் , பிரெஞ்சு , ஜெர்மன் , அமெரிக்க , ஆப்பிரிக்கா , இலத்தின், - மொழிகளின் படைப்புகள் அனைத்தும் எல்லோராலும் வாசிக்கப்படுகின்றன. இவை பன்முக வளர்ச்சிக்கும் துணையாக உள்ளன.
- மொழிபெயர்ப்பு என்பது சிறந்த கலை ஆகும். மொழிபெயர்ப்பாளன் இருமொழியிறு மொழிகளிலும் சிறந்த அறிவினைப் பெற்றிருப்பதோடு, அம்மொழிகள் சார்ந்த நாட்டுமக்களின் காலை இலக்கிய , நாகரீக பண்பாடு பற்றிய அறிவினையும் பெற்றிருக்க வேண்டும்.
- மொழிபெயர்ப்பு என்பது மொழியின் மூலக்கருத்துக்களை வெளிப்படுத்துவதாகவும் , மொழிச் சிதறலின்றியும் அமைய வேண்டும்.
- மொழிபெயர்ப்பு என்பது கவனமாகவும் , முறையாகவும் செய்யப்பட வேண்டும்.
- Hundred railsleepers were wsahed away - என்பதை ஒரு செய்தித்தாள் - தொடர் வண்டியில் உறங்கிக்கொண்டிருந்த நூறுபேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர் என்று செய்தி வெளியிட்டது. Railsleepers - என்பதற்குத் தண்டவாளத்தின் குறுக்குச் சட்டங்களைக் குறிப்பதாகும். அதனை உறங்கிக்கொண்டிருந்தோர் என்று மொழி பெயர்த்தது பெறும்பிழி ஆயிற்று.
- Camel -என்பதற்கு வடம் ( கயிறு ) , ஒட்டகம் என இரு வேறுபொருள்கள் உண்டு. எனவே அதனை பொருள் அறிந்து மொழிபெயர்க்க வேண்டும்.
- Underground drainage - என்பதை மொழிபெயர்த்து பாதாளச்சாக்கடை என்றனர். ஆனால், அது பொருத்தமாக இல்லை. தமிழோடு தொடர்புடைய மலையாள மொழியில் புதைச் சாக்கடை என்றனர். அது பொருத்தமாக அமைந்துவிட அதனையே பயன்படுத்தத்தொடங்கினர்.
- Tele - என்பது தொலை ( தொலைவு ) என்பதைக் குறிக்கிறது. ஆகவே , இதனை முன்னோட்டமாகக்கொண்ட சொற்கள் எளிதாக மொழிபெயர்க்கப்பட்டன.
- Trans - எனும் சொல்லானது முன்னோட்டமாக வந்தாலும் வெவ்வேறு பொருளைத் தருகிறது.
- எனவே , மொழிபெயர்ப்பு சிறப்பது மொழிபெயர்ப்பாளனால் மட்டுமல்ல, அவனது கலைச்சொல்லாக்கும் திறானால் தான் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.
வினாக்கள்
1. மொழிபெயர்ப்பின் தேவை குறித்து எழுதுக.
2. இலக்கிய இறக்குமதி என்றால் என்ன.?
3.மொழிபெயர்ப்பின் செம்மை என்பது பற்றி எழுதுக .
4. மொழிபெயர்ப்பின் வளர்ச்சி மற்றும் அதன் நன்மைகள் பற்றி எழுதுக.
தமிழாசிரியன்
தமிழன் என்று சொல்லடா....!! தலை நிமிர்ந்து நில்லடா..!!
வாழ்க வளமுடன் ..! வாழ்க வையகம் ..!!
ponanbu2022
Comments
Post a Comment