கதை பிறந்த கதை :
இறைவன் மனிதனுக்கு அருளியது ..!
கதை பிறந்த கதை :
கதைத்தல் என்பதற்குப் பேசுதல் என்பது பொருளாகும். காது பெற்றதன் பயன் கேட்டு மகிழ்வதிலேயே உள்ளது. திருவள்ளுவரும் கேட்டல் இன்பம் காணாத மக்களை மாக்கள் ( விலங்கு ) என்று சாடுகிறார். சிந்தனை ஊற்றெடுக்கச் செய்வது கதைகள்தான். அரசன் முதல் ஆண்டிவரை உள்ளோரை அறிவாளியாக்குவதும் சீர்மிகு கதைகள் தான். மனிதர்களின் மனதை ஒருமுகப்படுத்தி சிந்திக்க வைப்பன கதைகள் மட்டுமே. கதை கேட்டல் என்பதும் ஒரு யோகப்பயிற்சியே ஆகும்.
கண்டவற்றோடு நமது கற்பனையும் சேரந்து பிறப்பதே கதையாகும். கதை சொல்லிகள் ஆயிரம் பேர் இருந்தாலும் பாட்டி கதைகளே தனிச்சிறப்புப் பெற்றவையாகும். அவர்கள் அன்போடு ஊட்டும் அறிவு அமுதமே கதைகள். அவை , ஒருவனை வீரனாகவும், ஞானியாகவும் மாற்றும் ஆற்றல் கொண்டவையாகும். வீர சிவாஜியும், காந்தியடிகளையும் நமக்குத் தந்தவை பெண்டீர் உரைத்த பெருங்கற்பனைக் கதைகள்தான் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
காலம் காலமாக வாய்வழியாக ஊட்டப்படும் அறிவுப்பழச்சாறே கதைகள். நமது நாகரீகமும் , பண்பாடுகளும் கட்டிக்காக்கப்படுவதும் கதைகளால் தான். நிறையக்கதை கேட்கும் பழக்கமுள்ள குழந்தைகள் வாழ்வில் எத்தகைய சூழலையும் மிகச் சிறப்பாக சமாளித்து விடுவார்கள். பன்மொழிப்புலமையும் எளிதில் அமையும். சொல்வளமும், பொருள்நலமும் , பேச்சினில் தெளிவும் உடையவர்களாக இருக்கமுடியும் .
கதைகள் நினைவாற்றலின் தூண்கள் எனலாம்.
இதிகாச புராண காலம் தொட்டு இன்றுவரை கதை சொல்லும் பழக்கமும், கேட்கும்பழக்கமும் தொடர்ந்து வருவதே அதன் இன்றியமையாமையை நமக்கு அழகாக உணர்த்துகின்றன.
கதைக்கேட்கும் பழக்கத்தின் நீட்சியே இன்றைக்கு நாம் பார்க்கும் திரைப்படங்களும், தொலைகாட்சி தொடர்களும் ஆகும். கதை கேட்கும் பழக்கத்தின் வளர்ச்சியே வாசிக்கும் பழக்கம் ஆகும். அதன் நற்பயனாகவே நல்ல எழுத்தாளர்களும் , படைப்பாளிகளும் நமக்குக் கிடைக்கின்றார்கள்.
கதையின் கதை என்பது நீண்ட வரலாறு கொண்டது. அதிலும் குறிப்பாக , உறக்கத்தின் முன் சொல்லப்படும் கதைகள் நமது ஆழ் மனதில் பதிந்து விடுவதோடு , பல நல்ல ஆக்கங்கள் பிறக்கவும் வழி செய்கின்றன. எளிதாகக் கற்றலுக்கும் துணைசெய்கின்றன.
தமிழன் என்று சொல்லடா....!! தலை நிமிர்ந்து நில்லடா..!!
அன்புடன்
ponanbu
Comments
Post a Comment